Sunday, November 16, 2014

அப்புனு!

அவன் தான் எனக்கு காதலிக்க கற்றுக் கொடுத்தான். ரசிகையாய் இருந்த என்னைக் காதலியாய் மாற்றினான். வாசனையை சுவாசிக்க சொல்லிக்கொடுத்தான்.

"அப்புனூ! எங்க இருக்க...?"
"இதோ இங்க"
"என்ன செய்யற..."
"வாயேன், வந்து கட்டிக்கோயேன்"
"நான் மாட்டேன்"
"ப்ளீஸ்..."
"இல்லை, ரொம்ப சொர சொரப்பா இருக்கு"
"கட்டிதான் பாரேன், எப்படி இருக்குன்னு தெரியும்"
நான் கட்டிக் கொண்டேன்.
"எப்படி இருக்கு? வாசனையாய் இருக்கா"
"ம், ஆமாம்"
"சொரசொரப்பா இருக்கா"
"சுகமாய் இருக்கு"
"பேசிப் பாரேன்"
"அதுக்கு எப்படி புரியும்"
"புரியுமாம், ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்திருக்கிறார்கள்....எப்படி இருக்கன்னு கேளேன்"
"எப்படி இருக்க?"
"பார், எப்படி அசைகிறதுன்னு..."

எனக்கும் அசைந்தது போல் தான் இருந்தது.

"சரி வா வேலை நிறைய இருக்கு"

விருப்பமில்லாமல் வந்தான்.

மாலை ஆபீஸ் முடிந்து வந்தேன், வாசலில் கண் நிறைய கண்ணீருடன் அப்புனு!

"என்ன ஆச்சு?!"
"அவனுக்கு பல் வலிக்கட்டும்..."
"யாருக்கு?"
"கை முட்டியெல்லாம் வலிக்கட்டும்..."
"என்னன்னு சொல்லு..."
"அவன் பல் ராட்சஸ பல் மாதிரி வெளில வந்துடும்..."
"அப்படி சொல்லாதே! என்ன நடந்தது..."
"என் வேப்ப மரத்த ஒடச்சிட்டான்"
"இல்லடி பல் தேய்க்க குச்சி ஒடச்சுண்டான், இவனுக்கு கோபம்" என்றாள் என் அம்மா.
"இங்க வந்து பாரு அம்மா, எவ்வளோ ஒடச்சுண்டிருக்கான்னு"
"சரி விடு வளர்ந்துடும்...."

சமாதானமாகவேயில்லை, அப்பா, தாத்தா எல்லரிடமும் புலம்பிக் கொண்டேயிருந்தான். அன்று இரவு அப்புனு சரியாக் தூங்கவேயில்லை. வேப்ப மரத்தில் குருவி கட்டிய கூட்டை கலைத்த மாரிமுத்துவுடன் தூக்கத்தில் சண்டைப் போட்டான். Pokemon, BEN 10 எல்லாருமாக சேர்ந்து மாரிமுத்துவையும், குச்சி உடைத்தவனையும் அடித்து நொறுக்கி ஜெயிலில் போட்டார்கள்.

விடிந்ததும் அம்மா ஒரு லெட்டரை கையில் திணித்தாள்.

"நேத்து இவன் பண்ணின அமர்க்களதில் இதை கொடுக்க மறந்துட்டேன்"

லெட்டரை பிரித்தேன், கார்ப்பரேஷனில் இருந்து பாதாள சாக்கடை கட்ட இடைஞ்சலாய் இருப்பதால் வேப்ப மரத்தை வெட்டப் போவதாகவும் அதற்கு பதிலாக வேறு மரக் கண்றுகள் தருவதாகவும் எழுதியிருந்தார்கள்.

என் கண் அப்புனுவை தேடியது....மரத்தைக் கட்டிக் கொண்டு பேசிக்கொண்டிருந்தான். கண்ணீருடன் ஓடி சென்று கட்டிக்கொண்டேன், மரத்தையும், அப்புனுவையும்....

"ஏம்மா அழறே...?"

அழுது கொண்டயிருக்கிறேன், அவனும் கேட்டுக்கொண்டேயிருக்கிறான்
யாராவது அப்புனுவிடம் சொல்லுங்களேன், ப்ளீஸ்............



Saturday, November 15, 2014

மனிதன் இவ்வளவுதான்!

இந்த நீரும் வற்றிப் போகலாம்
மலையும் உடைந்து போகலாம்
மரங்கள் அற்றுப் போகலாம்
காற்றும் காணாமல் போகலாம்
வானம் அறுந்து போகலாம் - பூமியில்
உயிர்களின்றி போகலாம் - மனிதன்
ஆணவம் அகன்றிருக்காது - ஏதோ
ஒரு கிரகத்தில்
அழிவை விதைத்து கொண்டேயிருப்பான்!